கனடாவின் புகலிட முறைமையில் அதிரடி மாற்றம்; விரைவாக தீர்மானம் எடுக்க புதிய விதிகள்
கனடாவின் குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கை முறைமையை மேலும் வலுப்படுத்தி, விரைவான மற்றும் திறமையான சேவையை வழங்கும் நோக்கில் புதிய உத்தேச விதிமுறைகளை கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வரும் நிலையில், நீதியான, வெளிப்படையான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட புகலிட முறைமையைப் பேணுவதற்காக இந்த சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ‘கனடாவின் குடிவரவு முறைமை மற்றும் எல்லைகள் சட்டத்தை வலுப்படுத்தும் சட்டம்’ (Strengthening Canada’s Immigration System and Borders Act) அடிப்படையில் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளன.
புதிய விதிமுறைகள் தொடர்பாக பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளைப் பெறுவதற்காக 30 நாட்கள் ஆலோசனைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பு காலம் நிறைவடைந்த பின்னர், 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் புதிய விதிமுறைகள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகலிடக் கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்கள், அவற்றின் பரிசீலனை மற்றும் இறுதித் தீர்மானங்களை எடுக்கும் செயல்முறையை துரிதப்படுத்துவதே இந்த சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, புகலிட விண்ணப்ப நடைமுறைகளை மேலும் எளிமையாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும், அரசாங்கத்தின் முக்கிய பரிசீலனைகள் மற்றும் மறுஆய்வுகளுக்கு தெளிவான காலக்கெடுகள் நிர்ணயிக்கப்படவுள்ளன.

அதேவேளை, மீளப் பெறப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்ட புகலிடக் கோரிக்கைகளை மீண்டும் செயல்படுத்துவதற்கான தெளிவான விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்கும் ஏற்பாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், தகுதியான புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களுக்கான வேலை அனுமதிப்பத்திரங்களை விரைவாகப் பெறுவதற்கான நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்படுகின்றன. சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தகுதிநீக்க விதிகளில் இருந்து விதிவிலக்குகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் Lena Metlege Diab, நன்கு நிர்வகிக்கப்படும் புகலிட முறைமை அனைவருக்கும் நன்மை பயக்கும் என தெரிவித்துள்ளார்.
உண்மையில் பாதுகாப்பு தேவைப்படும் நபர்கள் விரைவாக பாதுகாப்பைப் பெறுவதற்கும், கனடாவில் புதிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு சமூகத்திற்கு பங்களிப்பதற்கும் இந்த மாற்றங்கள் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், பாதுகாப்பிற்குத் தகுதியற்றவர்களின் கோரிக்கைகள் மீதான தீர்மானங்களும் விரைவாக எடுக்கப்பட்டு முறைமையின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த மார்ச் 26, 2026 அன்று Bill C-12 என்ற புதிய சட்டமூலம் அரச அங்கீகாரம் பெற்று சட்டமாக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே தற்போது புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புள்ளிவிபரங்களின்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் கனடாவில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 63 சதவீதமும், 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதமும் குறைந்துள்ளது. இந்த நிலையில், புகலிட முறைமையை மேலும் திறம்பட செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சியாக இந்த புதிய சீர்திருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.