பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் (Assemblée nationale) நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வாக்கெடுப்பில், காவல்துறையினர் தற்காப்பிற்காகத் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை எளிதாக்கும் புதிய சட்ட மசோதா அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வலதுசாரி ‘குடியரசிவாதிகள்’ (LR) கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், பிரெஞ்சு அரசியலிலும் சமூக அமைப்புகளிடையேயும் பெரும் விவாதப் புயலையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆல்ப்-மாரித்தீம் (Alpes-Maritimes) மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான எரிக் போஜே (Éric Pauget) முன்மொழிந்த இந்தச் சட்டம், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்களின் கடமையின் போது துப்பாக்கியைப் பயன்படுத்த நேர்ந்தால், அது தற்காப்பிற்காகவே (Légitime défense) செய்யப்பட்டது என்ற சட்டப்பூர்வ முன்னனுமானத்தை அவர்களுக்கு வழங்குகிறது. கடந்த ஜனவரியில் விவாதிக்கப்பட்ட இந்த மசோதா, ஆளுங்கட்சிக் கூட்டணியின் ஆதரவைப் பெறுவதற்காகச் சில முக்கியத் திருத்தங்களுடன் நேற்றிரவு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தச் சட்டத்திற்கு இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை அமைப்புகளும் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இது காவல்துறையினரின் வன்முறைகளை நியாயப்படுத்துவதோடு, துப்பாக்கிப் பயன்பாட்டைச் சாதாரணமாக மாற்றிவிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர். இதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக, எதிர்க்கட்சியினர் இந்தச் சட்டத்தைக் காவல்துறையினருக்குக் கொடுக்கப்பட்ட “கொல்வதற்கான உரிமம்” (Permis de tuer) என்று மிகக் காட்டமாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.