கிழக்கில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம?? தோண்டும் பணியில் போலீசார் தீவிரம்
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள தொய்யும் வட்டை கீழ் கண்டம் பகுதியில் தனியார் வயல் காணி ஒன்றில் இன்று புதன்கிழமை(17) அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவுக்கமைய அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.
இக்காணியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த காணியில் மண் அகழ்வு பைக்கோ இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தடயப் பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்பதுடன் அகழ்வு பணி நிறுத்தப்பட்டது்

இதேவேளை குறித்த பகுதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்து வந்துள்ளதுடன் அது அக்காலகட்டத்தில் புலிகளின் மார்க்கமாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பணி சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி , கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், அம்பாறை சம்மாந்துறை விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரிகள் கிராம உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணி இன்று காலை 9 மணி தொடக்கம் பகல் 12 மணி வரை மேற்கொண்டபோதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
–பாறுக் ஷிஹான்-