ஹோர்முஸ் நீரிணைப் பாதுகாப்பு – ஐ.நா.வில் பிரான்சின் புதிய அமைதி முன்னெடுப்பு.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) தலைமையிலான அரசாங்கம், ஹோர்முஸ் (Hormuz) நீரிணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் (UN) சபையில் புதிய முன்முயற்சி ஒன்றை எடுக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி “முழுமையாக நடுநிலையான மற்றும் அமைதியான” பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஒரு சர்வதேச கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவின் (Kenya) தலைநகர் நைரோபியில் (Nairobi) நடைபெற்ற பிரான்ஸ் – ஆப்பிரிக்க உச்சி மாநாட்டின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் மேக்ரான் இதனைத் தெரிவித்தார்.
“ஹோர்முஸ் நீரிணை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்; அங்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளும் நீக்கப்பட வேண்டும்” என்று அதிபர் மேக்ரான் திட்டவட்டமாக வலியுறுத்தினார். மேலும், ஈரானை (Iran) நோக்கிக் கடுமையான அதேசமயம் உரையாடலுடன் கூடிய அணுகுமுறை அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், ஹோர்முஸ் நீரிணையின் மறுதிறப்பே தற்போதைய மிக முக்கிய முன்னுரிமை என்றார். பிற விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பே இந்த நடவடிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனுடன், ஈரான் மற்றும் அமெரிக்கா (USA) இடையே அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், அதில் ஐரோப்பிய நாடுகளும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்புகளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான அறிக்கைகள் வெளியாவது குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். மேலும், லெபனான் (Lebanon) பகுதியில் இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதல்களில் பதின்மூன்று (13) பேர் உயிரிழந்தமை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கடும் கண்டனம் தெரிவித்த அவர், முழுமையாக மதிக்கப்படும் போர்நிறுத்தம் அவசியம் எனவும் வலியுறுத்தினார்.