பிரான்சின் (France) மார்செய் (Marseille) நகரில் உள்ள லா காஸ்டெல்லான் (La Castellane) பகுதியில், போதைப்பொருள் கடத்தலில் (Drug trafficking) தண்டிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களை அவர்களின் சமூக வாடகை வீடுகளிலிருந்து (HLM – Habitation à loyer modéré) வெளியேற்ற வீட்டு வசதி நிர்வாகமான ‘எரிலியா’ (Erilia) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், நேற்று மே பத்தொன்பதாம் (19) தேதி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வெளியேற்றக் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

குற்றங்கள் நடந்த இடத்திற்கும், அவர்கள் வசிக்கும் வீட்டிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதே நீதிபதியின் இந்த முடிவிற்குக் காரணமாக அமைந்துள்ளது. மேலும், “வாடகையாளர்கள் அமைதியான பயன்பாட்டு விதிகளை மீறியதாகப் போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை” எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மாவட்ட அரசு ஆணையம் (Préfecture) தீர்ப்பின் முழுமையான காரணங்களைப் பெற்ற பிறகு, மேல்முறையீடு (Appeal) செய்வது குறித்து ஆய்வு செய்யும் எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், சமூக வீடுகளைப் பயன்படுத்திப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல் எதிர்ப்புச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.