19ஆவது திருத்தம் தொடர்பில் நன்றாக அறிந்தவன் நான் மாத்திரமே : மைத்திரிபால சிறிசேன !

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பில் தற்போது பரவலாகப் பேசப்பட்டாலும், அது தொடர்பில் நன்றாக அறிந்தவன் நான் மாத்திரமே. அதில் ஜனாதிபதியின் பதவி காலத்தை குறைப்பதற்கு சர்வசன வாக்கெடுப்பு தேவையில்லை. ஆனால் அதனை அதிகரிப்பதாயின் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவையில் ஞாயிற்றுக்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பில் தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. 19ஆவது திருத்தம் தொடர்பில் நன்றாக அறிந்தவன் நான் மட்டுமே. நான் பொது வேட்பாளராகக் களமிறங்கிய போது கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலம் 6 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.
18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் கொண்டு வரப்பட்ட ஜனாதிபதிக்கான தன்னிச்சையான அதிகாரங்கள் அனைத்தும் இதன் மூலம் நீக்கப்பட்டன. 49 அமைப்புக்களுடன் இது குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பெரும்பாலானோர் 18ஐ மறந்து 19ஐ பற்றி மாத்திரமே பேசிக் கொண்டிருக்கின்றனர். 18ஆவது திருத்தத்தின் ஊடாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட மன்னர் ஆட்சியிலிருந்த அதிகாரங்களே மஹிந்த ராஜபக்ஷவுக்கும் காணப்பட்டன.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் உள்ள ஜனாதிபதியின் பதவி காலம் 6 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக்கப்பட வேண்டும் என்பதையே எனது சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரத்ன, நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதுவே பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது.
இதன் போது ஜனாதிபதியின் அதிகாரங்களில் எவற்றைக் குறைக்கலாம் என்பதையும், அவற்றுக்கு அப்பால் அதிகாரங்களைக் குறைப்பதாயின் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் என்பதையும் நீதிமன்றம் தெரிவித்தது. அதே போன்று சர்வசன வாக்கெடுப்பின்றி பதவி காலத்தை குறைக்க முடியும். ஆனால் அதனை அதிகரிப்பதாயின் சர்வசன வாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டும் என்றும் சட்ட அறிஞர்கள் சுட்டிக்காட்டினர். இதுவே உண்மை நிலையாகும்.
, 19ஆவது திருத்தம் தொடர்பில் நன்றாக அறிந்தவன் நான் மாத்திரமே : மைத்திரிபால சிறிசேன !







