ஆசிரியர் கலைவாணன் நாகலெட்சுமி 34 வருட கல்விப் பணியாற்றி பணி ஓய்வு பெறுகிறார்.

கல்முனை கார்மெல் பற்றிமா கல்லூரின் ஆரம்பக் கல்வி ஆசிரியராக கடமையாற்றிய கலைவாணன் நாகலெட்சுமி இன்று (24.07.2024) அரச பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். 34 வருடங்கள் ஆரம்பக் கல்வி மாணவர்கள் இடைநிலைக் கல்வியினைத் தொடர்வதற்கான பணிகளை செவ்வனே ஆற்றி ஓய்வு பெறும் ஆசிரியை கலைவாணன் நாகலெட்சுமி களுவாஞ்சிகுடியைச் சேர்ந்தவர். இவர் ஆரம்பக் கல்வியினை மட்/பட்/களுவாஞ்சிகுடி வித்தியாயலத்தில் பயின்று இடைநிலை மற்றும் உயர்தரக் கல்வியினை மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திலும் பூர்த்தி செய்தார்.
கல்வி கற்கும் காலத்தில் பாடசாலையில் முன்மாதிரியான மாணவராக திகழ்ந்தார். கலை, கலாசாரம், விளையாட்டு என பல்வேறு திறன்களைக் கொண்டிருந்தார். இதன் காரணமாக பாடசாலைகளில் வகுப்புத் தலைவராக, மாணவர் தலைவராகக் கடமையாற்றி அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மத்தியில் நன் மதிப்பினை பெற்ற சிறந்த மாணவியாக வலம் வந்தார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரம் சித்தியடைந்த இவர் 1990 ஆண்டு ஆசிரியராக அரச பணியில் நியமனத்தைப் பெற்று தான் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் கற்ற பாடசாலையில் முதல் கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் கல்முனை கார்மெல் பற்றிமா கல்லூரியில் இன்று வரை கல்விப் பணியாற்றி ஓய்வு பெறுகின்றார்.
ஒருவரது வாழ்க்கையில் கல்வி கணிசமான பங்கு வகிக்கிறது அதிலும்; ஆரம்பக் கல்வி ஒரு தனிநபரின் பண்புகளை வடிவமைப்பதில் முதன்மையான படியாகும். இந்த வகையில் தன்னிடம் வருகின்ற மாணவர்களில் அதிக கவனம் செலுத்தி மாணவர்களின் சமூக, மன, அறிவாற்றல் திறன்கள் செழித்து வளர்ந்து பரந்தளவில் பயன் பெற்று எதிர்காலத்தில் மாணவர்கள் சமுகத்தில் காணப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய மாணவர்களை உருவாக்குவதில் கலைவாணன் நாகலெட்சுமி முன்னின்று உழைத்தார் என்பது ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
, ஆசிரியர் கலைவாணன் நாகலெட்சுமி 34 வருட கல்விப் பணியாற்றி பணி ஓய்வு பெறுகிறார்.









