ஆரம்ப சுகாதார சேவையை பலப்படுத்த அரசாங்கத்தினால் 150 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு

நாட்டின் ஆரம்பச் சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக 150 மில்லியன் டொலர் நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) கிண்ணியா அரசாங்க வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் இம்ரான் மஹ்ரூப் எம்பி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
நாட்டின் ஆரம்பச் சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக 150 மில்லியன் டொலர் நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ள நிலையில் அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது கிண்ணியா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கொள்ளப்பட்டுள்ள மதிப்பீடுகளுக்கு இணங்க அடுத்த வருடத்தில் அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மத்திய அரசாங்கத்தின் கீழ் வரும் வைத்தியசாலைகள், மாகாண சபை மட்டத்திலான வைத்தியசாலைகள் என்ற எந்தவித பேதங்களும் இன்றி அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கி அவற்றுக்கான தேவைகளைப் பெற்றுக் கொடுக்கும்.
மத்திய அரசாங்கம் மாகாண சபை அரசாங்கம் எனப் பிளவு படுத்தி நாம் நோயாளர்களைப் பார்க்க முடியாது. அந்த வகையில் நோயாளர்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளை முன்னரை விட சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் நிலவும் தாதிமாருக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதன் போது கிண்ணியா வைத்தியசாலையும் கவனத்திற் கொள்ளப்படும் என்றார்.
, ஆரம்ப சுகாதார சேவையை பலப்படுத்த அரசாங்கத்தினால் 150 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு









