அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு வழங்க நடவடிக்கை !

அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அரசு ஊழியர் சம்பளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கவனமாக பரிசீலித்து தொடர்புடைய எதிர்கால திருத்தங்களைச் செய்வதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் படி, யு. ஆர். செனவிரத்ன தலைமையில் நிபுணர் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டதாகவும், மீளாய்வுகளின் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட சம்பளக் கட்டமைப்பை அமுல்படுத்தும் வரை ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவை வழங்கவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
அரச ஓய்வூதியர்களிள் தற்போது சுமார் 7 இலட்சமனோர் ஓய்வூதியம் பெற்று வருவதாகவும், அதற்கமைவாக 2024 ஆம் ஆண்டில் இந்த இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்கான அரசாங்கம் 8.4 பில்லியன் ரூபா மேலதிக செலவீனத்தை சுமக்க நேரிடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடன் நிர்வகிப்பதில் சவால்கள் இருந்தபோதிலும் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் தற்போது எதிர்நோக்கும் நிதி நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அரசாங்கம் வழங்கும் விரைவான குறுகிய கால தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சர் சியம்பலாபிட்டிய மற்றும் அரச ஓய்வூதியர்களின் கூட்டு தேசிய அமைப்பின் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (02) காலை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்கி மூத்த பிரஜைகளின் வட்டி வீதத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
, அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு வழங்க நடவடிக்கை !








