பிரதான செய்திகள்

தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு மீண்டும் ஒத்திவைப்பு

தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு மீண்டும் ஒத்திவைப்பு

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையே நாளைய தினம் நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.

ஏலவே இந்த சந்திப்பு நேற்றைய தினம் நடைபெறவிருந்த நிலையில் அது நாளைய தினம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையில் அண்மையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்தக் கூட்டத்துக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் நாளை மாலை 4 மணியளவில் இந்த சந்திப்பை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சந்திப்புக்கான அழைப்பு கடிதம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரால் நேற்றைய தினம் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி பங்கேற்பதற்குக் கால அவகாசம் கோரிய நிலையில் திகதி தீர்மானிக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

ஏலவே இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், குறித்த சந்திப்பில் பங்கேற்பது தொடர்பான இறுதி தீர்மானம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.

Back to top button