பிராந்திய செய்திகள்கிழக்கு மாகாண செய்திகள்

இனவாதத்தால் சிக்கியுள்ள மயிலத்தமடு பண்ணையார் பிரச்சினை – வியாழேந்திரன்

மட்டக்களப்பு மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினையில் நீதிமன்ற தீர்ப்பினையே நடைமுறைப்படுத்தமுடியாத நிலைமையே இருந்துவருவதாக என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தனபாசுந்தரத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திணைக்களங்களின் தலைவர்கள்,திணைக்களங்களின் முக்கியஸ்தர்கள்,பொலிஸ் மற்றும் ஏனைய திணைக்களங்களின் உயரதிகளாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த ஆண்டு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பரிவில் சுமார் 139 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

அத்துடன் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

பிரதேச அபிவிருத்திக்கூட்டங்கள் நடைபெறும்போது திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேசத்தில் உள்ள மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் கூட்டத்திற்கு வரவேண்டும் என்பதற்காக எந்த அதிகாரிகளும் வரமுடியாது எனவும் இதன்போது அதிகாரிகளுக்கான பணிப்புரைகளும் இராஜாங்க அமைச்சரினால் விடுக்கப்பட்டது.

இதன்போது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வும் காணப்பட்டது.

மயிலத்தமடு பகுதியில் மீண்டும் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனால் கால்நடைகளை மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குவதுடன் மாடுகள் தொடர்ந்து இறக்கும் நிலையேற்பட்டுள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு இங்கு மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர் சங்க உறுப்பினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் அறுவடைகள் முடிந்துள்ள நிலையில் அங்கிருந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் செல்லாத நிலையில் மீண்டும் பயிர்ச்செய்கைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதனை தடுப்பதற்கு அங்குள்ள காவல் நிலையம் ஊடாக நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பண்ணையாளர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

தமது கால்நடைகள் உணவின்றி தினமும் இறக்கும் நிலையிருந்துவருவதாகவும் அங்குள்ள மாடுகளை மட்டக்களப்பு ஏனைய பகுதிகளுக்குகூட கொண்டுசெல்லமுடியாத வகையில் மாடுகள் உணவின்றி பலவீனமடைந்துள்ளதாகவும் கடந்த 10மாதங்களாக எந்தவித பால் பெறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் பண்ணையாளர்கள் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுவருவதாகவும் இதன்போது பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பில் நாங்கள் பிரதேச அபிவிருத்திகுழு மற்றும் மாவட்ட அபிவிருத்திகுழுவில் தீர்மானங்களை நிறைவேற்றி குறித்த அமைச்சுகளுக்கு அனுப்பியுள்ளோம்.நாங்கள் தொடர்ச்சியாக பண்ணையாளர்களுக்கு சார்பான நிலைப்பாட்டிலேயே இருந்துவருகின்றோம்.

ஆனாலும் எங்களை சிலர் அரசியலுக்காக இதில் எதிராக காட்டமுனைகின்றனர்.
சட்டத்தினை மதிக்காத இனவாத நிலைமை அதிகமாகவுள்ள நீதிமன்றத்தையே அவமதிக்கும் நிலையில் உள்ளவர்களுடனேயே செயற்படவேண்டிய நிர்ப்பந்த நிலையில் நாங்கள் உள்ளோம்.

எந்தவொரு நிலையிலும் நாங்கள் பண்ணையாளர்களுக்கு எதிரான செயற்பாடுகளில் நாங்கள் ஈடுபடவும் மாட்டோம்,ஆதரிக்கவும் மாட்டோம். இந்த பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்பதில் எங்களுக்கு அதிகளவான அக்கரையுள்ளது.இதன்மூலம் அதிகமான விமர்சனங்களுக்கு நாங்கள் உள்ளாகின்றோம் என்றார்.

இதன்போது நீண்டகாலமாக இருந்துவரும் மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட அபிவித்திக்குழு கூட்டத்தில் திர்மானம் ஒன்றை எடுத்து அதன் ஊடாக அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்களை இணைத்து கலந்துரையால் முன்னெடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வொன்றை காணவும் தீர்மானிக்கப்பட்டது

Back to top button