பிரதான செய்திகள்

புதிய அரசமைப்பில் அரசியல் தீர்வு உறுதி!

புதிய அரசமைப்பில் அரசியல் தீர்வு உறுதி!

இலங்கைக்குப் புதிய அரசமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு, அந்த அரசமைப்பில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர  தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “2015 – 2019 காலப் பகுதியில் ஆட்சியில் இருந்த அரசால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்புக்கான செயற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் இருந்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை மையப்படுத்திய புதிய அரசமைப்பைத் தயாரிப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

அதனை நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டுள்ளோம்.

இருப்பினும், அந்த இடைக்கால அறிக்கையை விடவும் முற்போக்கான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாம் அது பற்றி கலந்துரையாடுவதற்குத் தயாராகவே உள்ளோம்.

புதிய அரசமைப்பில் அரசியல் தீர்வு உறுதி : அநுர தரப்பு தகவல்

எவ்வாறாக இருந்தாலும் 22 திருத்தங்கள் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு புதிய அரசமைப்பு தேவை என்ற விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எமது அமைப்பின் கொள்கைகளை மையப்படுத்திய விடயத்தை முன்வைப்போம். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதவில்லை.

எமது முன்மொழிவுகள் தீர்வை அடைவதற்கான ஒரு பயணப்பாதையாகும்.

சில தரப்பினர் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து அந்த வழியால் தீர்வை அடையலாம் என்று குறிப்பிடுகின்றார்கள்.

இதேநேரம், புதிய அரசமைப்பு உருவாக்கப்படுகின்றபோது 13ஆவது திருத்தச் சட்டம் மட்டுமல்ல முதலாவது திருத்தத்திலிருந்து 22ஆவது திருத்தம் வரையில் அகற்றப்பட்டு அவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டதொரு புதிய அரசமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

அதேநேரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் மாகாண சபை முறைமை நீக்கப்படாது.பல தசாப்தங்களாக இனங்களுக்கிடையிலான பிரச்சினை நீடித்துக்கொண்டுதான் உள்ளது.

அதற்கான தீர்வு வழங்கப்படும் வரையில் மக்களிடத்திலிருந்து வெளிவருகின்ற கோஷங்கள் ஓயப்போவதில்லை.

எனவே, எமது நோக்கம், அனைவரினது இணக்கத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தீர்வானது மக்களின் அங்கீகாரத்துக்காக விடப்படும். அதாவது, புதிய அரசமைப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button