அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது : ஜனாதிபதி !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் முன்மொழிவை, கம்பஹா மாவட்ட மக்கள் ஏகமனதாக வழிமொழிந்தனர்.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் உட்பட 250 முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிட வேண்டும் என்ற முன்மொழிவை கம்பஹா மாவட்ட மக்கள் ஏகமனதாக உறுதிப்படுத்தினர்.
அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும், நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே அரசியலை உருவாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரை இப்பயணத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.
“ஒன்றாக வெல்வோம் – நாம் கம்பஹா ” என்ற தொனிப்பொருளில் இன்று (21) கடவத்தை பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கிச் செல்லும் வழிகள் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பொதுக் கூட்டத்தில், கம்பஹா மாவட்டத்தின் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்த மக்கள், ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவை கம்பஹா மாவட்ட மக்கள் சார்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்தார்.
அப்போது, மேடையில் இருந்த பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் உட்பட 250 முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களும், கூட்டத்தில் பங்கேற்ற 15,000இற்கும் மேற்பட்டோர் கைகளை உயர்த்தி ஏகமனதாக அந்த மொன்மொழிவு நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி பொருளாதாரம் மற்றும் அரசாங்கம் இல்லாத நாட்டைத்தான் பொறுப்பேற்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை சரியாக நிறைவேற்றியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் எப்போதும் தனக்காக அன்றி, நாட்டுக்காகவே செயற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“மக்கள் எனக்கு வழங்கிய அடிப்படையான பொறுப்பை நான் நிறைவேற்றியுள்ளேன். பொருளாதாரமும் அரசாங்கமும் இல்லாத நாட்டையே பொறுப்பேற்றேன். பதில் ஜனாதிபதியாக பதவியேற்கக் கூட அரசாங்க அலுவலகம் ஒன்று இருக்கவில்லை. எனக்கு கட்சியும் இருக்கவில்லை. எனது கட்சியில் நான் மட்டுமே பாராளுமன்றத்தில் இருந்தேன். அதன்படி ஐக்கிய தேசிய கட்சியினர் என்று நம்பி ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒத்துழைப்பு கேட்டேன் ஒத்துழைக்கவில்லை டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்தனர்.
மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள விரும்பமில்லாத காரணத்தினால், அவர்களும் எனக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை. பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல் பீரிஸிடம் ஒத்துழைப்பு கேட்டேன். அவர் என்னை சந்திக்க கூட தயாராக இருக்கவில்லை. நான் பேசினேன் அவர் என்னோடு பேசக்கூட தயாராக இருக்கவில்லை. பின்னர் மஹிந்த ராஜகக்ஷவைச் சந்தித்து பேசினேன். அவர் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்தார்.
அவ்வாறு ஆரம்பித்த அரசாங்கத்தில் நான் ஜனாதிபதியாக இருக்க எனக்கு ஒரு இடமிருக்கவில்லை. ஜனாதிபதி மாளிகையில் ஒன்றுகூடியிருந்த மக்கள் நீச்சல் தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்தனர். எனது வீடு எரிக்கப்பட்டிருந்தது. அலுவலகமும் முற்றுகையிடப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகம் மட்டும் எஞ்சியிருந்தால் அதன் மேல் மாடியில் நானும், கீழ் மாடியில் பிரதமர் தினேஸ் குணவர்தனவும் பணிகளை ஆரம்பித்தோம்.
அதன் பின்னர்தான் ஐ.எம்.எப் உடன் கலந்துரையாடி அடுத்தகட்ட பணிகளை ஆரம்பித்தோம். அனைவரும் ஒன்றுபட்டே பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை நான் அறிந்துகொண்டேன். அரசியல் செய்து இந்த நாடு சீரழிக்கப்பட்டிருந்தது. இலங்கை பெருமைக்குரிய நாடு. இந்த நாடு இந்த நிலைக்குச் செல்ல வேண்டியது அவசியமா? மகா வம்சத்தில் கூட இந்த நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தாக குறிப்பிடப்படவில்லை.
கஷ்டமான தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டியிருந்தது. நாட்டுக்கு எரிபொருள் கொள்வனவு செய்ய புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்பும் வரையில் காத்திருந்தோம். அமெரிக்காவின் சமந்தா பவரின் உதவியோடு, உலக வங்கியின் உதவியில் உரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தோம். பணம் அச்சிட வேண்டாம் என்ற நிபந்தனையை ஐ.எம்.எப் விதித்தது. வங்கிகளிடத்திலிருந்து கடன் பெறவும் வேண்டாமென அறிவுறுத்தப்பட்டது.
சில நிவாரணங்களைத் தவிர்த்து வருமானங்களைத் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவற்றை செய்திருக்காவிட்டால் நெருக்கடியில் விழுந்திருப்போம். எந்த அளவு கஷ்டங்கள் வந்தாலும் எழுந்து வர முடியும் என்று நம்பினேன். இவ்வாறு முன்னோக்கிச் சென்ற போதும் பல முறை எதிர்கட்சியின் ஒத்துழைப்பை கோரினேன்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர்களின் ஒத்துழைப்பைக் கோரினேன். அவர்கள் ஆதரவு வழங்க முன்வரவில்லை. நான் மக்களின் மேம்பாட்டுக்காகவும் நாட்டின் மேம்பாட்டுக்காவுமே பாடுபடுகிறேன் என்பதை அறிந்து அனைத்து செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியும், மக்கள் விடுதலை முன்னணியும் மக்களுக்காக சிறிதும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை.
உலக நாடுகளும் எமக்கு உதவ முன்வர கூடாதென அறிவிப்புக்களை வெளியிட்டனர். ஆனால் எமது பயணம் தொடர்ந்தது. எமக்கு கடன் வழங்கும் நாடுகள், ஐ.எம்.எப் அமைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்புக்களும் இப்போது எம்மோடு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இலங்கையை இந்த நிலையிலிருந்து மீட்டெடுக்க முயற்சிக்கிறோம். இன்னும் சிறிது நாட்களில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டது என்ற அறிவிப்பு வரும். அதன் பின்னர் நம் முன்பிருக்கும் பல தடைகள் நீங்கிவிடும்.
தற்போதும் சில தடைகள் நீங்கியுள்ளன. எமக்கு உதவி வழங்கிய தரப்புக்கள் சில வேலைத்திட்டங்களுக்காக மீண்டும் நிதி வழங்குகின்றன. மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளும் ஆரம்பிக்கப்படும். அவ்வாறான நிலையை தற்போது அடைந்திருக்கிறோம்.
எரிபொருள், உரம், மின்சாரம், மருந்து என அத்தியாவசியப் பொருட்கள் இருக்கவில்லை. வைத்தியசாலைகளும் பாடசாலைகளும் மூடிக்கிடந்தன. அந்த காலம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? கண்டிவீதியின் இந்த பகுதியில் காணப்பட்ட வரிசைகள் நினைவிருக்கிறதா? பியன்வில வரையில் வரிசைகள் நீண்டு காணப்பட்டன. வரிசைகளுக்கு இடம் போதவில்லை. அப்படியொரு நிலையே நாட்டில் இருந்தது. அவ்வாறான கஷ்டங்கள் எமக்கு மீண்டும் வேண்டுமா? அல்லது முன்னோக்கிச் செல்லப் போகிறோமா?
பிரச்சினைகள் உள்ளன. இருப்பினும் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். நான்கு வருடங்கள் தொழில் கிடைக்கவில்லை. தனியார், அரசாங்கம் என இரு துறைகளும் வழங்கவில்லை. வருமான வழிகளை உருவாக்க வேண்டும். இத்போது வௌிநாடுகளுக்கு பலர் செல்கிறார்கள். இன்னும் பல வருடங்கள் தொழில் இருக்காவிட்டால் மற்றுமொரு மக்கள் போரட்டம் வெடிக்கும். இன்று அவ்வாறன பிரச்சினைகளுக்கே முகம் கொடுக்கிறோம்.
நாட்டு மக்களின் வருமானத்தை மேம்படுத்த வேண்டும். முன்னேறிச் செல்ல வேண்டும். வளர்ச்சி கண்ட உலகத்துடன் இணைந்து பயனிக்க வேண்டும். இந்த அரசாங்கம் ஒருபோதும் வறிய மக்களை மறந்துவிடவில்லை. நாட்டின் வறுமை 25 சதவீதமாக காணப்படுகிறது. அதனைக் குறைப்பதற்கான முதல் முயற்சியாக சமூர்த்திக்கு மாறாக ‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் 3 மடங்கு அதிக கொடுப்பனவை வழங்கினோம். பயனாளிகள் எண்ணிக்கையை 18 – 24 இலட்சம் வரையில் அதிகரித்தோம்.
10 கிலோ அரிசியை இலவசமாக வழங்கினோம். மருந்துகள் தட்டுபாடின்றி கிடைக்கிறன. பிரச்சினைகள் குறைந்துள்ளன. இவற்றைப் பெற்றுக்கொடுத்த பின்னர் புரட்சிகரத் திட்டமான காணி உறுதிகளை வழங்க ‘உறுமய’ வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். அனுபத்திரம் உள்ள அனைவருக்கும் இலவசமாக காணி உறுதிகள் வழங்கப்படும். 20 இலட்சம் பேருக்கு அவ்வாறான உறுதிகள் வழங்கப்படவுள்ளன.
கொழும்பு நகருக்குள் 2 இலட்சம் பேருக்கு வீட்டின் உரிமைகளை வழங்கவுள்ளோம். தோட்டப் பகுதிகளை கிராமங்களாக பிரகடனப்படுத்தி வீடுகளை கட்டமைக்க நிதி நிவாரணங்களை வழங்குவோம். ஒரு மாதத்தில் 75 வருடத்தில் செய்ய முடியாத புரட்சியை செய்திருக்கிறோம்.
கிராமப் பகுதிகளிலேயே வறுமை அதிகமாகவுள்ளது. அதனை நிவர்த்திக்க விவசாய நவீமயமாக்கல் திட்டத்துடன் சுற்றுலா பயணிகள் வருகையை 50 இலட்சம் வரையில் அதிகரிப்பதற்கான திட்டங்களை ஆரம்பித்திருக்கிறோம்.
இதனால் சிறிய காணிகளிலும் பெருமளவு வருமானம் ஈட்டலாம். மக்களை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கவும் புரட்சிகர திட்டங்களை செயற்படுத்துகிறோம். அந்த முயற்சிகளை கைவிட முடியாது. அதற்காகவே பொருளாதார மாற்றச் சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறோம். இங்குள்ள இளையோர் தமது வருமானத்தை ஐந்து மடங்காக அதிகரித்துக்கொள்ள விரும்புகின்றனர்.
வறுமையிலிருந்து விடுபட எதிர்பார்க்கின்றனர். அதற்கு நாமும் ஒத்துழைக்க வேண்டும். கல்வி மறுசீரமைப்பு செய்யப்படும். அத்தோடு தொழில் கல்வியும் மறுசீரமைக்கப்படும். பல்கலைக்கழகங்கள் புதிதாக உருவாக்கப்படும். அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும். எமக்கு எதிர்காலம் இருக்க வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பியகம அபிவிருத்தி அடையாத பகுதியாக காணப்பட்டது. சிலர் சாக்குகளையும், பீடியும் தயாரித்தனர். கல்வி அமைச்சராக இந்த காலப் பகுதியில் இரண்டு வர்த்தக வலயங்களையும், மின் உற்பத்தி நிலையத்தையும், இப்பகுதியை சுற்றிலும் தொழிற்சாலைகளையும் அமைக்க வழி செய்திருக்கிறேன்.
இலங்கையின் மிகப்பெரிய தொழில் வலயமாக இந்த பகுதியை மாற்றியிருக்கிறோம். மற்றைய பகுதிகளில் ஏன் இதனை செய்ய முடியாமல் உள்ளது. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையும் இங்கு கொண்டு வரப்பட்டது. இங்கு 160 ஏக்கரில் கேரகல பகுதியில் மூன்றாவது வர்த்தக வலயத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம்.
சுத்திகரிப்பு நிலையம் திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட பின்னர் சபுகஸ்கந்த அபிவிருத்தி செய்யப்படும். இதேபோல் கண்டி, யாழ்ப்பாணம், அநுராதபுரம், திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அதுவே எமது எதிர்காலமாக இருக்க வேண்டும்.
இந்நாட்டின் எதிர்காலத்தை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக கட்டமைக்க இடமளியேன். நாட்டின் தேவைக்கேற்ப அரசியல்வாதிகள் இசைந்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். சிங்களவர்கள் என்று கூறிக்கொண்டு யாசகம் செய்வதில் பயனில்லை. பெருமிதம் உள்ள மனிதர்கள் என்றால் முன்னேறிச் செல்ல வேண்டும். அதற்கான மாற்றத்தை செய்வோம்.
போலி வாக்குறுதிகளை வழங்குவதில் பயனில்லை. அதனால் சஜித், அனுரவை எம்மோடு இணைந்து முன்னோக்கிச் செல்ல வருமாறு அழைக்கிறேன். கம்பஹா இலங்கையின் இதயமாகும். டீ.எஸ்.சேனநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன போன்றவர்கள் இங்குதான் உருவாகினர். ஐக்கிய தேசிய கட்சியினரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள். பண்டாரநாயக்கவும், டீ.எஸ். சேனநாயக்கவும் சுதந்திரத்துக்காக ஒற்றுமையாக செயற்பட்டனர்.
1971 ஆம் கலவரத்தின் காலத்தில் சிறிமாவோ பண்டாராநாயக்கவுக்கு ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு உதவி வழங்கினார். அதன் பின்னர் பிரேமதாசவின் காலத்திலும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் எமக்கு உதவி வழங்க முன்வந்தார். பாராளுமன்றத்தில் மோதினாலும் நாட்டைப் பாதுகாக்க அர்ப்பணித்திருக்கிறோம். சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் ஜனநாயகத்தைப் பாதுகாத்திருக்கிறோம். ஆசியாவில் எந்த நாட்டுக்கும் அந்த பெருமை இல்லை. நாம் இதே பாதையில் முன்னோக்கி செல்ல வேண்டும். மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல முடியாது. நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கிகொள்வோம். அழைப்புக்கு உரிய பதில் வழங்க வேண்டும். அதனை நேரம் வரும் போது கூறுவேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது : ஜனாதிபதி !