கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை மூடப்படும் !

(வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை நாளை (11) வியாழக்கிழமை மூடப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார்.
நாளை பிற்பகல் 2.30 மணியளவில் இவ் வருட பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை மூடப்படவுள்ளது.
உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல்விழா உற்சவத்திற்காக வரலாற்றில் முதல் தடவையாக அதிகப் படியான யாத்திரீகர்கள் கானக பாதயாத்திரையை மேற்கொண்டு வந்தனர்.
வரலாற்றில் கானகப் பாதை திறந்த( 30) முதல் நாளில் சுமார் 7000 பாதயாத்திரீகர்கள் பயணித்தமை இதுவே முதல் முறையாகும்.
அதேபோல உகந்தை முருகனாலய கொடியேற்றம் இடம் பெற்ற கடந்த ஆறாம் தேதி கானகத்தில் பிரவேசித்த அடியார்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். இதுவும் ஒரு வரலாற்று பதிவாகும்.
கதிர்காமத்திற்கான கானகப் பாதை கடந்த 30 ஆம் திகதி திறக்கப்பட்டு கடந்த 12 தினங்கள் அடியார்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
, கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை மூடப்படும் !