ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது : ஜனாதிபதி !

 நாட்டில் மருந்து விலையை கட்டுப்படுத்தல், மருந்துத் தட்டுப்பாடு ஏற்படாமல் மேற்கொள்ளப்படும் பணிகளில் நிபந்தனையற்ற பங்களிப்பை வழங்குதல், அரசின் சிறுநீரக நிதி, சுகாதார நிதியை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல சமூக நலத் திட்டங்களுக்கு இந்தச் சங்கம் பங்களித்துள்ளது.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தேஷமான்ய சந்திக கங்கந்தவுக்கும், சிறந்த மாவட்ட சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விருதுகளை வழங்கிவைத்தார்.

மேலும், அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் சபையினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது. 

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 

“கடந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில் நாட்டுக்குத் தேவையான மருந்துகளை வழங்கிய மருந்தக உரிமையாளர்கள் சங்கத்துக்கு அரசின் சார்பில் எனது விசேட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாடு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு அரச நிறுவனங்கள் வீழ்ந்து கொண்டிருந்தபோது நீங்கள் முன்வந்து உங்களது பொறுப்பை நிறைவேற்றினீர்கள்.

தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து உங்களின் சங்கம் அளித்துள்ள அறிவிப்பின்படி, அவை குறித்து கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இன்று இந்த நாட்டில் பலர் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் அதற்கு உங்கள் முயற்சிதான் காரணம் என்று கூற வேண்டும். கடந்த காலங்களில் நாட்டுக்குத் தேவையான மருந்துகளைப் பெற பணம் இருக்கவில்லை.

ஆனால், அந்த கடினமான நேரத்தில் நீங்கள் தப்பி ஓடவில்லை. நீங்கள் உங்கள் கடமையை செய்தீர்கள். அதைத்தான் நம் நாட்டில் உள்ள அனைவரிடமும் எதிர்பார்க்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடைபெறுவதில்லை. இந்தப் பிரச்சினைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று உங்களுக்கோ எனக்கோ தெரியாது. நாம் அனைவரும் எம்மால் இயன்ற வரை நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

நான் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்தது. நாட்டில் அந்நிய செலாவணி இல்லை. தேவையான மருந்துகள், எரிபொருள் கொண்டு வர பணம் இல்லை. கிடைக்கும் பணத்தை எரிபொருளுக்கு வழங்குவதா அல்லது உரத்துக்கு வழங்குவதா என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஆனால், நாம் உரங்களைப் பெற்று விவசாயப் பணிகளை ஆரம்பித்தோம்.

அதன் ஊடாக உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டு மருந்து மற்றும் எரிபொருளை மக்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம். அத்தகைய கடினமான சூழ்நிலையை நாங்கள் கடந்து வந்தோம். இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட பணத்தால், இந்தியாவிலிருந்து மருந்துகளைப் பெற முடிந்தது. 

மேலும், பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட பணத்தால் உணவுப் பொருட்களைப் பெற முடிந்தது.

எவ்வாறாயினும், ஒரு நாடாக நாம் முதல் 6 மாதங்களை மிகவும் சிரமத்துடன் கடந்தோம். அதன் பிறகு நாடு படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மக்கள் உங்களிடம் வந்து பணம் இல்லாமல் மருந்துகளைக் கேட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. அவர்களுக்கு மருந்துகளை கொடுக்காமல் சாகச் சொல்வதா, நட்டத்தை அனுபவித்து மருந்து கொடுப்பதா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டியேற்பட்டது.

நாம் அனைவரும் அந்தக் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. நாம் அனைவரும் சிரமப்பட்டு அந்த முடிவுகளை எடுத்ததால்தான் நாம் ஒரு நாடாக முன்னோக்கி வருகிறோம். 

மேலும், VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது. இந்த முடிவுகளால் நாட்டின் வருமான மூலங்கள் அதிகரித்ததன் காரணமாக ரூபாயின் பெறுமதி வலுப்பெற்று, பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடிந்தது.

கடந்த வாரம், IMF பணிப்பாளர்கள் குழுவின் இரண்டாம் சுற்று கலந்துரையாடல்களை நடத்தினோம். இலங்கையை வழிநடத்தும் திட்டம் சரியானது என்று அதன்போது சான்று கிடைத்துள்ளது. அதன்படி கடனைச் செலுத்த கால அவகாசம் கிடைத்துள்ளது. 

மேலும் இந்தப் பணியை நிறைவுசெய்வது குறித்து தற்போது சீனாவுடன் கலந்துரையாடி வருகிறோம்.

மேலும், பாரிஸ் கிளப்பில் உள்ள நாடுகள் மற்றும் பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்காத நாடுகளுடனும், ஏனைய கடன் வழங்கிய தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு உடன்பாட்டை எட்டவும் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் நாடு விழுந்த பாதாளத்தில் இருந்து இப்போது மீண்டு வருகிறது. ஆனால் இதன் மூலம் பயணம் முடிவதில்லை. ஆனால் ஒரு நாடாக நாம் ஏன் படுகுழியில் விழுந்தோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நாட்டில் ஏற்றுமதித் தொழிலை நாங்கள் உருவாக்கவில்லை. எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் நாங்கள் அனைத்தையும் தவறவிட்டோம். 1979இல் நான் சீனாவுக்குச் சென்றபோது, சீனா நம்மை விட ஏழ்மையான நாடாக இருந்தது. இப்போது சீனா நமக்குப் பணம் தருகிறது. 1991இல் நான் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது வியட்நாமின் தொழில்துறை அமைச்சர் என்னைச் சந்தித்தார்.

உங்களுக்கு எப்படி முதலீடுகள் வந்தன, எப்படி அன்னியச் செலாவணி கிடைத்தது, வர்த்தக வலயங்களை எப்படி உருவாக்கினீர்கள் என்று என்னிடம் ஆலோசனை கேட்டார். எனது அறிவுரைகளை அவர் கவனித்தார். ஆனால் இப்போது நான் வியட்நாம் சென்றால் அவரிடம் இது பற்றிக் கேட்கவேண்டியுள்ளது. 

கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டோம். இதைச் சரிசெய்து புதிய பொருளாதாரத்தை நோக்கிச் செல்லாவிட்டால் மீண்டும் ஒரு நாடு என்ற வகையில் பாதாளத்தில் விழுவோம். அந்த இருண்ட யுகத்துக்கு மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டுமா? இப்போது நாட்டுக்கு புதிய செயற்றிட்டத்தை முன்வைத்துள்ளோம். பழைய முறையை விட்டுவிட்டு புதிய அமைப்பைக் கொண்டு முன்னேற வேண்டும்.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளின் முன்னேற்றத்துடன் நாமும் முன்னேற வேண்டும். போட்டி நிறைந்த பொருளாதாரத்துக்கு நாம் திரும்ப வேண்டும். செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அங்கு பயன்படுத்தப்பட வேண்டும். புதிதாக சிந்தித்து புதிய நாட்டை உருவாக்குவோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

, மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது : ஜனாதிபதி !

Back to top button