ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

4 வயது மகனை கொடூரமாகத் தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தாயாருக்கு அனுப்பிய தந்தை கைது !


ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைத் கொடூரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தனது தாயாருக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய தந்தையொருவர் நேற்று வியாழக்கிழமை (20) மாலை 5:30 மணியளவில் கைது செய்யப்பட்டதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர். .

கம்பஹா தோட்டம் மேல் பிரிவு உடுபுஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் குழந்தையை அடிக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகம் மூலம் மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் இந்த வீடியோவை ஏனைய சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும், அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தை, வெலிமடை சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் ஊவா பரணகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப கபில கல்லகே சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெலிமடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

, 4 வயது மகனை கொடூரமாகத் தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள தாயாருக்கு அனுப்பிய தந்தை கைது !

Back to top button