பாராளமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வி !
சுற்றுலாப் பயணிகளின் வருகை வட கிழக்கில் குறைவாக காணப்படுகின்றது. திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா..என பாராளமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தில் 18.06.2024. நேற்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார் .
மேலும்,கருத்து தெரிவிக்கையில் ,
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போக்குவரத்து இன்று பிரதானமான பிரச்சனையாக உள்ளது. யாழ்ப்பாணத்தினை பொறுத்த வரையில் பலாலி விமான நிலையம் ஊடாக சில சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சூழல் உள்ளது. ஆனால் மட்டக்களப்பில் உள்ள விமான நிலையம் கடந்த காலத்தில் இயங்கும் நிலையில் இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தினுள் விமானங்கள் தரையிறங்குவதில்லை. இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பிற்கு புகையிரதம் வருவதற்கு 2 வருடங்களுக்கு முன்னர் நாங்கள் எடுத்த முயற்சியினால் விசேட Express Train மட்டக்களப்பிற்கு வருகின்றது. ஆனால் மட்டக்களப்பிற்கு வருகின்ற புகையிரதப் பாதையினை கூட இன்று வரை புனரமைப்பு செய்யாமையின் காரணமாக பயணிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் 20ம் திகதி வரவிருப்பதை செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலத் தொடர்பினை ஏற்படுத்துவது, புகையிரத சேவையினை ஆரம்பிப்பது மிக முக்கிய விடயமாக உள்ளது. ஏனெனில் தென்னிந்தியாவில் உள்ள எங்களது தமிழ் சகோதர மக்களில் குறிப்பிட்ட தொகையினர் இலங்கைக்கு வந்தால் வடக்கு, கிழக்கினை எம்மால் கட்டியெழுப்ப முடியும். ஆகவே அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகள் மூலமாக வருமானமீட்டுவதற்கான வழியினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டுமென தொடர்ச்சியாக கூறக் காரணம் நாங்களே எங்களது பிரதேசங்களை கட்டியெழுப்ப முடியும். ஜனாதிபதி அவர்கள் இன்று கூட சிறிய பெரும்பான்மையுடன் மாகாண சபைக்கு புதிதாக ஒரு சட்ட மூலத்தினை கொண்டு வரத் தேவையில்லை. கௌரவ சுமந்திரன் அவர்கள் தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.
முன்பிருந்த மாகாண சபை தேர்தல் முறையில் தேர்தலினை நடத்தக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும். ஜனாதிபதிக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டுமாயின் அவர் தமிழ் மக்களுக்கு கூறும் சில விடயங்களையாவது செய்ய வேண்டும். இவற்றினை மேற்கொள்ளாது செயற்படுவதனால் தமிழ் மக்களை ஏமாற்றுவதனையே தனது நோக்கமாக கொண்டுள்ளார் என்பதனையே நாங்கள் எண்ண முடியும் எனவும் தெரிவித்தார் .
, பாராளமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வி !