வாழைச்சேனையில் 5அரை கிராம் ஐஸ் போதை பொருளுடன் மூவர் கைது

கைது செய்த மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டு ஒப்படைத்துள்ளனர் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினமான புதன்கிழமை (21) அதிகாலை 4 மணிக்கு வாழைச்சேனை பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது அங்கு போதை பொருளுக்கு அடிமையான இருவர் பிரபல வியாபாரியிடம் போதை பொருள் வாங்குவதற்கு காத்துக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் அங்கு சென்ற வியாபாரி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாறு வேடத்தில் கண்காணிப்பில் இருந்த பொலிஸார் அவர்களை சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்தனர்
இதன் போது வியாபாரியிடம் இருந்து 4 கிராம் ஐஸ்போதை பொருளையும், ஏனைய இருவரிடமிருந்து ஒன்றரைக்கிராம் மற்றும் 200 மில்லிக்கிராம் ஐஸ்போதை பொருள்களையும் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டு தம்மிடம் ஓப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனகராசா சரவணன்